TamilsGuide

சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு

புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தொடர்ச்சியான களப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றையதினம் (04) சம்மாந்துறை கல்லரிச்சல், விழினயடி மற்றும் உடங்கா ஆகிய PHI பிரிவுகளில் விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ​வீதியோர சிற்றுண்டி விற்பனை நிலையங்கள், ​தயிர் விற்பனை நிலையங்கள், ​பேக்கரிகள், ​பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) ​போன்றன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

​பரிசோதனையின் போது காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் (Medical Certificate) இல்லாமை போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

​இந்த சோதனையில் முதன்முறையாக விதிமீறல்களில் ஈடுபட்ட 6 விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

​ கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அதனைச் சீர்செய்யத் தவறிய 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

​இந்நிலையில் பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது , அதன்படி, உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் மற்றும் காலாவதித் திகதி என்பவற்றில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.
 

Leave a comment

Comment