TamilsGuide

ஈரானின் புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுத்தாலும் கொலை செய்வோம்- இஸ்ரேல்

ஈரான் மீது கடந்த 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், அந்த நாட்டு உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. இதைத்தொடர்ந்து புதிய உச்சபட் சத்தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை ஈரான் முடுக்கி விட்டு உள்ளது. இதில் காமேனியின் மகன் முஜ்தபா தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக யாரை தேர்ந்தெடுத்தாலும் கொன்று விடுவோம் என இஸ்ரேல் மிரட்டல் விடுத்து உள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தனது எக்ஸ் தளத்தில், 'இஸ்ரேலை அழித்தல், அமெரிக்காவையும், சுதந்திர உலகையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்துதல், ஈரானிய மக்களை அடக்குதல் போன்ற திட்டங்களை தொடரவும், வழிநடத்தவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும் அழிக்கப்படுவதற்கு இலக்காக இருப்பார்கள். அவரது பெயர் என்ன? எங்கே மறைந்திருக்கிறார்? என்பதெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை என குறிப்பிட்டு இருந்தார். இஸ்ரேலின் இந்த மிரட்டல் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
 

Leave a comment

Comment