ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த 28-ந் தேதி அந்த நாடு மீது போரை தொடங்கின. தலைநகர் டெஹ்ரானில் நடந்த அதிரடி தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
இதனால் ஆவேசமடைந்த ஈரான் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. இதனால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பயங்கரமான போர் மூண்டுள்ளது. உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த போர் நேற்று 5-வது நாளாக உக்கிரமாக நடந்தது.
ஈரானின் பாதுகாப்பு படைகளை குறிவைத்து இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதனால் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் பயங்கர குண்டுவெடிப்பு சத்தமும், அவசரகால படையினரின் சைரன் சத்தமுமாக காதைப்பிளந்தன.
இதைப்போல அமெரிக்காவும் ஈரானின் பல்வேறு இலக்குகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தகர்த்தது. குறிப்பாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு, ஈரானின் நூற்றுக்கணக்கான நீண்டதூர ஏவுகணைகள், ஏவுதளங்கள் மற்றும் டிரோன்களை அழித்ததாக அமெரிக்க கடற்படை அதிகாரி பிரட் கூப்பர் கூறினார்.
மறுபுறம் ஈரானும் இஸ்ரேலை நோக்கி நேற்றும் அலையலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகர்களை சுற்றிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.
எனினும் ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தங்கள் வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதற்கிடையே வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்தும் ஈரான் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தியது.
அந்தவகையில் அமெரிக்காவின் 5-வது கடற்படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைனில் நேற்று காலையிலேயே சைரன்கள் ஒலித்ததை கேட்க முடிந்தது. இதைப்போல கத்தாரில் ஈரான் வீசிய 2 ஏவுகணைகளில் ஒன்று அல்-உதைத் தளத்தில் விழுந்ததாகவும், எனினும் இதில் சேதம் எதுவும் இல்லை என்றும் அந்த நாட்டு ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் சவுதி அரேபியாவிலும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முக்கியமாக சவுதி அரேபியாவின் ராஸ்தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் தாக்குதல் நடந்தது. முன்னதாக கடந்த 2-ந் தேதி யும் இந்த நிறுவனத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதால் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல ஈராக், சிரியாவை கடந்து துருக்கி நோக்கி வந்த ஈரானின் நீண்டதூர ஏவுகணை ஒன்றை மத்திய திரைக்கடல் பகுதியில் உள்ள நேட்டோ அமைப்பின் வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்தது.
எனினும் இந்த ஏவுகணை துருக்கியை குறிவைத்து செலுத்தவில்லை என ஈரான் கூறியுள்ளது. அது சைப்ரசை நோக்கி செலுத்தப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் நடமாட்டத்துக்கு தடை விதித்துள்ள ஈரான், அதை மீறி அந்த வழியாக செல்லும் கப்பல்களை தாக்கி வருகிறது. அந்தவகையில் மால்டா கொடியுடன் சென்ற கப்பல் ஒன்றை நேற்று ஏவுகணை ஒன்று தாக்கியது.
அந்த கப்பலில் இருந்த 2 ஊழியர்களை ஓமன் படைகள் காப்பாற்றியதாக கூறப்பட்டு உள்ளது. இது கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 4-வது தாக்குதல் ஆகும்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்து விட்டது.
மறுபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
எனினும் போரின் முதல் 2 நாட்களிலேயே அமெரிக்காவின் 500-க்கு மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை கூறியுள்ளது.
ஆனால் இஸ்ரேலில் நிகழ்ந்த இறப்பு விவரங்கள் வெளியாகவில்லை. அங்கே இதுவரை 11 பேர் மட்டுமே இறந்ததாக அந்த நாடு கூறியுள்ளது.
உலக நாடுகளை உலுக்கி வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என ஈரான் கூறியுள்ளது. அமெரிக்காவை நம்ப தயாரில்லை எனவும், நாங்கள் விரும்பும் வரை போரை தொடர்வோம் எனவும் அயதுல்லா அலி காமேனியின் ஆலோசகர் ஒருவர் கூறினார்.
இதைப்போல ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரி ஜானி தனது எக்ஸ் தளத்தில், 'நேட்டன்யாகுவுடன் சேர்ந்து தனது கோமாளித்தனமான செயல்களால், அமெரிக்க மக்களை ஈரானுடன் நியாயமற்ற போருக்கு இழுத்துள்ளார் டிரம்ப். இந்த போரில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா முதலாவதா அல்லது இஸ்ரேல் முதலாவதா என்பதை அவர் கணக்கிட்டு கொள்ளட்டும்' என்று கூறியிருந்தார்.
மேலும் அவர், 'கதை தொடர்கிறது. இமாம் காமேனியின் தியாகம் உங்களிடமிருந்து பெரும் விலையைக்கோரும்' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவாக யாரும் பேசினாலோ அல்லது செயல்பட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க வெற்றிப்பாதையில் இருப்பதாக அந்த நாட்டு ராணுவ மந்திரி ஹெக்சேத் கூறியுள்ளார். ஈரானின் வான் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறிய அவர், ஈரானுக்கு எதிராக இந்த போர் தீர்க்கமாகவும், பேரழிவு தரும் வகையிலும், கருணை இன்றியும் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.


