பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் மாரிகோல்ட் எனும் நாய் ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளதாக ரொயிடர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கேன்டர்பரிக்கு அருகிலுள்ள பிளீன் பகுதியில் வசிக்கும் மிராண்டா பெலேச்சியா என்பவருக்குச் சொந்தமான இரண்டு வயதுடைய ஐரிஷ் செட்டர் வகை நாய், பூடில் வகை நாயுடன் இணைசேர்க்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் பிறந்த 'ஐரிஷ் டூடுல்ஸ்' என அழைக்கப்படும் இந்த 17 குட்டிகளுமே, பிரித்தானியாவில் இவ்வகை கலப்பின நாய்களில் பதிவான மிகப்பெரிய எண்ணிக்கையிலான குட்டிகள் என நம்பப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட 42 வயதான மிராண்டா,
"ஒன்றன் பின் ஒன்றாக குட்டிகள் வந்துகொண்டே இருந்தபோது என்னால் நம்ப முடியவில்லை எனத் தெரிவித்தார்.
17ஆவது குட்டி பிறந்த பின்னரும் கூட, அதுதான் கடைசியா என தமக்கு சந்தேகம் இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், 17 குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளதோடு, அவற்றுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டு நுண் சிப் பொருத்தப்பட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தனை குட்டிகளை ஈன்றெடுத்த மாரிகோல்ட், ஆரம்பத்தில் சற்று சோர்வாகக் காணப்பட்டாலும் தற்போது உடல்நலம் தேறி வருவதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.


