சீனாவில் 10 வயது சிறுவன் தனது பரிசுப் பணத்தை பயன்படுத்தியதாகத் தந்தை மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில், அந்த சிறுவன் தனது தந்தையுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சீனர்களின் பாரம்பரியமான சந்திர புத்தாண்டு (Chinese New Year) கொண்டாட்டத்தை முன்னிட்டு, உறவினர்கள் சிறுவனுக்காக 80 ஆயிரம் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 லட்சம்) பரிசுத் தொகையை அனுப்பியுள்ளனர்.
இந்தத் தொகை தந்தையின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. ஆனால், அந்த பணத்தை தனது இரண்டாவது திருமண செலவிற்காக தந்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது பரிசுப் பணத்தை திருப்பித் தர வேண்டும் என சிறுவன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம், அந்த 80 ஆயிரம் யுவான் முழுத் தொகையையும் சிறுவனுக்கு திருப்பித் தர தந்தைக்கு உத்தரவிட்டுள்ளது.
சந்திர புத்தாண்டு நாளில், சீன கலாச்சாரத்தில் ஹோங்க்பாவோ (Hongbao) எனப்படும் சிவப்பு நிற உறையில் பணம் வைத்து பெரியவர்கள், சிறுவர்களுக்கு வாழ்த்து பரிசாக வழங்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


