அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள், இன்று தொடக்கம், அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவை தொழிற்சங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து கடந்த 93 நாட்களாக அனர்த்த நிவாரண அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இரவு பகலாகப் பணியாற்றியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இழப்பீடு மற்றும் நிவாரணக் கொடுப்பனவுகளுக்கான மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் தொழில்நுட்ப அதிகாரிகள் களமிறங்கி முக்கிய பங்காற்றியுள்ளனர்.
இந்தநிலையில், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய போதிலும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில்
அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
தமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையைத் தவிர வேறு வழியில்லை என, அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவை தொழிற்சங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


