TamilsGuide

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளை ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளைய தினம் மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்களும் நடைபெறவுள்ளது.

நாளை மாலை நற்கருணை ஆராதனையும், மாலை வழிபாடுகளும் நடைபெறும்.

மறுநாள் சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

கச்சதீவு யாத்திரைக்காகச் செல்ல இருக்கின்ற யாத்திரிகர்களுக்கான பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதன் பிரகாரம் நாளை அதிகாலை நான்கு மணியிலிருந்து பகல் ஒரு மணி வரை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகாட்டுவான் இறங்குதுறை நோக்கிய பேருந்து பயணங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இங்கே செல்ல விரும்புகின்றவர்கள் குறுக்கட்டுவான் இறங்கு துறையிலே தங்களுடைய அடையாள அட்டையை காட்டி தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.

வேறு எங்கும் அந்தப் பதிவுகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

அதே வேளையிலே, இங்கு போகின்ற யாத்திரியர்கள் நாளையதினத்துக்கு தேவையான உணவுகளைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாளை இரவு உணவு அங்கே வழங்கப்பட மாட்டாது. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலி முடிந்த பின்னர் காலை உணவு யாத்திரியர்கள் எல்லாருக்கும் வழங்கப்படும்.

அதேவேளை படகு சேவையின் ஒரு வழி கட்டணமாக 1,200 ரூபாய் அறவிடப்படும்.

அங்கு செல்வோர் தேவையான குடிநீரையும் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாளை பகல் ஒரு மணிக்குப் பின்னர் படகு சேவைகள் இடம்பெற மாட்டாது.

அத்துடன் இந்த வருடம் இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையிலே நூற்றுக்கு மேற்பட்ட குருக்கள் துறவிகள் அங்கே வருகின்றார்கள்.

அதே வேளையில் இலங்கையிலிருந்தும் யாழ். மறை மாவட்ட குருமுதல்வருடன் ஐம்பதுக்கு மேற்பட்ட குருக்கள் துறவிகள் இந்தத் திருநாளிலே பங்கு பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment