TamilsGuide

ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவதை எதிர்க்கும் கனேடியர்கள்

லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி கனடாவின் பிரதமரானதைத் தொடர்ந்து, அவரது கொள்கைகள் ஆல்பர்ட்டாவின் பாரம்பரியக் கொள்கைகளுக்கு நேரெதிராக உள்ளதால், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.  

இந்நிலையில், கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது குறித்து மற்ற மாகாணங்களில் வாழும் கனேடியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. 

Angus Reid Institute (ARI) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆய்வின் முடிவுகள், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கு எதிராக வாக்களிப்போம் என பெரும்பான்மை கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

79 சதவிகித கனேடியர்கள் ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவதைத் தடுக்கும் வகையில் வாக்களிப்போம் என தெரிவித்துள்ளார்கள்.

ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.

ஆனால், ஃபெடரல் அரசுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.

ஆகவே, வளம் நிறைந்த ஆல்பர்ட்டா, கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்களில் ஒரு பிரிவினர் கருதுகிறார்கள்.

ஆனால், எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் நிறைந்த ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்தால், அது கனடாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என மற்ற மாகாண மக்கள் கருதுகிறார்கள்.

Leave a comment

Comment