கனடாவுக்கு அனுப்புவதாக 48 லட்ச ரூபாய் மோசடி - விவசாயி பொலிசில் புகார்
கனடா
இந்தியாவின் குஜராத்தில் வாழும் விவசாயி ஒருவர் தன் மனைவியை கனடாவுக்கு அனுப்ப விரும்பிய நிலையில், அவருக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.
குஜராத்திலுள்ள காந்தி நகர் என்னுமிடத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர், தனது மனைவியை கனடாவுக்கு அனுப்ப விரும்பியுள்ளார்.
தன் மனைவிக்கு கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவதற்காக அவர் உள்ளூர் ஏஜன்சி ஒன்றை அணுகியுள்ளார்.
அந்த ஏஜன்சியிலுள்ளவர்கள், அந்தப் பெண்ணுக்கு முதலில் பணி அனுமதி பெற்றுத்தருவதாகவும், ஒரு வருடம் வேலை பார்த்தபிறகு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றுத்தருவதாகவும் வாக்களித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, மூன்று தவணைகளில் 43 லட்ச ரூபாய் கட்டியுள்ளார் அந்த நபர்.
அவரது மனைவிக்கு பணி அனுமதி ஒன்று வழங்கப்பட, அவர் விமானம் ஏறி ரொரன்றோ சென்றடைந்துள்ளார். ஆனால், கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகள், அவருக்கு பணி கொடுப்பதாக அவரிடமிருக்கும் கடிதம் கூறும் நிறுவனம், வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிக்கவேயில்லை என்று கூறியுள்ளார்கள்.
ஏமாற்றத்துடன் அந்தப் பெண் இந்தியா திரும்ப, சட்டச் செலவுகள் உட்பட மேலும் 5 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளார் அந்த விவசாயி.
ஆனால், அவரது மனைவியை கனடா அனுப்புவதாகக் கூறிய ஏஜண்ட்களில் ஒருவர் துபாய்க்குப் பறந்துவிட்டார்.
தன் மனைவிக்கு கனேடிய குடியிருப்பு அனுமதி பெற்றுத்தருவதாக, பணம் பெற்றுக்கொண்டு அந்த ஏஜன்சி ஏமாற்றிவிட்டதாக அந்த விவசாயி பொலிசில் புகார் செய்துள்ளார்.
அதைத்தொடர்ந்து பொலிசார் இந்த மோசடி தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.






















