TamilsGuide

இந்தியாவில் விமான விபத்தில் ஏழு பேர் பலி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெட்பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நோயாளர் காவு வண்டி (Air Ambulance) ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானம் நேற்று (23) இரவு 7:11 மணிக்கு ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன், இரவு 7:30 மணியளவில் ரேடார் அமைப்பிலிருந்து மறைந்துள்ளது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

விபத்து ஒன்றில் 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக புதுடெல்லிக்கு அழைத்துச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விமானத்தில் பயணித்த ஒரு மருத்துவர், ஒரு தாதியர், 2 உதவியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 7 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment