TamilsGuide

கடவுச்சீட்டு குறித்து பிரித்தானிய பயண விதிகளில் திடீர் மாற்றம்

பிரித்தானிய மற்றும் ஐரிஷ் (Irish) ஆகிய இரு நாடுகளின் பிரஜாவுரிமை கொண்டவர்கள், காலாவதியான பிரித்தானிய கடவுச்சீட்டுகளை (Passports) பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழைவதற்குப் புதிய தற்காலிக சலுகை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இது விமான நிறுவனங்கள் மற்றும் ஏனைய போக்குவரத்து நிறுவனங்களின் தீர்மானத்திற்கு உட்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய புதிய விதிகளின்படி, புதன்கிழமை முதல் செல்லுபடியாகும் பிரித்தானிய அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டு கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது விமான நிறுவனங்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப, காலாவதியான பிரித்தானியக் கடவுச்சீட்டுகளையும் ஒரு மாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளலாம் என உள்துறை அமைச்சு (Home Office) இணையதளத்தில் அறிவித்துள்ளது.

காலாவதியான பிரித்தானியக் கடவுச்சீட்டு 1989 அல்லது அதற்குப் பின்னரானதாக இருக்க வேண்டும். அத்துடன், மின்னணு பயண அங்கீகாரத்திற்கு (ETA) தகுதியுடைய வேறொரு நாட்டின் செல்லுபடியாகும் கடவுச்சீட்டையும் அவர்கள் வைத்திருக்க வேண்டும்.

இரண்டு கடவுச்சீட்டுகளிலும் உள்ள தனிப்பட்ட விபரங்கள் சரியாக ஒத்துப்போக வேண்டும். இந்த திடீர் மாற்றங்கள் பயணிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, அவுஸ்திரேலிய பயணத் துறை சங்கத்தின் (ATIA) தலைமை நிர்வாகி டீன் லாங், இந்தத் தற்காலிக நடைமுறை மேலதிக குழப்பங்களையே உருவாக்கும் என விமர்சித்துள்ளார்.

இந்த மாற்றம் பயணிகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment