பிரித்தானிய கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு, பிரித்தானியா அறிமுகம் செய்ய உள்ள விதி ஒன்று சிக்கலை உருவாக்கியுள்ளது.
2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், அதாவது, நாளை மறுநாள் முதல், பிரித்தானிய கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், தங்களிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆக, கனடாவுக்கு குடிபெயர்ந்து அங்கு வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள், அவ்வப்போது பிரித்தானியா சென்று தங்கள் உறவினர்களை சந்தித்துவந்த நிலையில், பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், அவர்களிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லையென்றால் பிரித்தானியாவுக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
சாரா பைரன், 1970களில் கனடாவுக்கு வாழ வந்துவிட்டார். அவரது உறவினர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்துவருகிறார்கள்.
குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையாவது இங்கிலாந்துக்குச் சென்று அவர்களை சந்தித்துவருவது சாராவின் வழக்கம்.
70 களிலேயே கனடாவில் குடியமர்ந்துவிட்டதால், சாரா காலாவதியான தனது பிரித்தானிய பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவில்லை.
ஆக, இந்த திடீர் மாற்றத்தால், அடுத்த மாதத்திலிருந்து இங்கிலாந்திலிருக்கும் தன் உறவினர்களைக் காணச் செல்வது எப்படி என குழப்பமடைந்துள்ளார் சாரா.
அந்த திடீர் விதியால் சிக்கலை சந்திக்க உள்ளவர்கள், 800 முதல் 1,000 டொலர்கள் செலவிட்டு, ’certificate of entitlement’ என்னும் சான்றிதழை வாங்கவேண்டும் அல்லது தங்கள் கனேடிய குடியுரிமையை துறக்கவேண்டும்.
கனடாவில் வாழும் பிரித்தானியர்கள் பலருக்கு, இரண்டுமே கடினம்.
’நான் என்னிடம் உள்ள கனேடிய பாஸ்போர்ட்டின் உதவியால், உலகம் முழுவதும் பயணிக்கலாம். ஆனால், நான் வளர்ந்த என் நாட்டுக்குச் செல்ல எனக்கு அனுமதில்லை’, வேடிக்கைதான் என்கிறார் சாரா.
விடயம் என்னவென்றால், சிக்கல் சாரா போன்ற சிலருக்கு அல்ல. பிரித்தானியாவில் பிறந்து கனடாவில் வாழ்ந்துவருபவர்கள் எண்ணிக்கை, 460,000க்கும் அதிகம்!


