மட்டக்களப்பு நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் வேத்துச்சேனை பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் , போரதீவுப்பற்று பிரதேசசபையினால் உடனடியாக குறித்த வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக வழங்கிவைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நவகிரி குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து, அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து வெளியேறிய வெள்ள நீரினால், மட்டக்களப்பு வெல்லாவெளி வேத்துச்சேனை பிரதான வீதி இன்று மீண்டும் சேதமடைந்துள்ளது.
கடந்த( 06.02.2026)ஆம் திகதி பெய்த கடும் மழையினால் இவ்வீதியில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உடைந்து போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பிரதேச சபை தவிசாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக இவ்வீதி சீர்செய்யப்பட்டு பாவனைக்கு விடப்பட்டது.
மீண்டும் நவகிரி குளத்தின் வான் கதவுகள் 6 அடி திறக்கப்பட்டமையினால் ஏற்பட்ட அதிக நீர் வரத்து காரணமாக, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீதிப்பகுதி இன்று காலை மீண்டும் அடித்துச் செல்லப்பட்டு தாழிறங்கியது.
வேத்துச்சேனை கிராம மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதை இது என்பதால், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தற்போது அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று வெல்லாவெளி பிரதேச சபையின் கனரக வாகனங்களின் உதவியுடன் வீதியைச் சீர்செய்யும் பணிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டன.
இப்பணிகளில் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன், வெல்லாவெளி வட்டார உறுப்பினர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் வீதியை மீண்டும் போக்குவரத்துப் பாவனைக்கு ஏற்றவாறு சீர் செய்து வழங்கியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் வான் கதவுகள் திறக்கப்படும்போது இவ்வீதி சேதமடைவது தொடர்கதையாக உள்ளதால், இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வாகப் பாலம் அல்லது பெரிய அளவிலான கல்வெட்டுகளை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


