அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனினும் இது கனேடிய தொழிலாளர்களுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி அல்ல என கனடாவின் மிகப்பெரிய தனியார் துறை தொழிற்சங்கமான Unifor தெரிவித்துள்ளது.
"இந்தத் தீர்ப்பு ட்ரம்ப்பின் வரிகள் சட்டவிரோதமானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், கனேடிய தொழிலாளர்கள் இதனை வெற்றியாகக் கருதக்கூடாது" என Unifor தேசியத் தலைவர் லானா பெய்ன் தெரிவித்துள்ளார்.
கனடா மீது , வாகன உற்பத்தி, உருக்கு, அலுமினியம் மற்றும் மரப் பொருட்கள் மீது 'தேசிய பாதுகாப்பு' (Section 232) என்ற போர்வையில் விதிக்கப்பட்டுள்ள வரிகள் இப்போதும் அமுலில் உள்ளன.
இவை எப்போது வேண்டுமானாலும் விரிவுபடுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. IEEPA வரிகள் நீக்கப்பட்டாலும், அமெரிக்க அதிகாரிகள் மாற்றுச் சட்டங்களைப் பயன்படுத்தி மீண்டும் வரிகளை விதிக்கத் தயாராகி வருவதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை அமெரிக்க உயர் நீதிமன்ற தீர்ப்பு, மென்மரங்கள் மீதான நீண்டகால எதிர்ப்பு வரி விவகாரத்திலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு வெறும் நீதிமன்றத் தீர்ப்புகளை மட்டும் நம்பியிருக்காமல், கனடா தனது சொந்த தொழில்துறை கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் Unifor தேசியத் தலைவர் லானா பெய்ன் தெரிவித்துள்ளார்.
எனவே கனடா , உள்நாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் லானா பெய்ன் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.


