மெக்சிக்கோவில் விடுமுறை கழித்து திரும்பிய பல கனடியர்கள் கடுமையான வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலர் கனடாவிற்கு திரும்பிய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஹாமில்டனில் இருந்து தனது குடும்பத்துடன் மெக்சிக்கோவின் விடுதி ஒன்றுக்கு பயணம் செய்த கெல்லி பென்னட், தங்கள் விடுமுறை மூன்றாம் நாளிலிருந்து “ஒருவருக்குப் பிறகு ஒருவர் உடல்நலக்குறைவால் விழுந்தனர்” என தெரிவித்தார்.
“ஐந்து, ஆறு பேராக ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டோம். பல குடும்பங்கள் அறைகளிலேயே முடங்கிக் கிடந்தனர். இது தெளிவாகப் பரவிய ஒரு தொற்று நோய்,” என அவர் கூறினார்.
குழந்தைகள் பலர் படுக்கையிலேயே இருந்தததாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கு திரும்பிய பின்னர் மருத்துவ பரிசோதனைகளில் உணவு மூலம் பரவும் தொற்று மற்றும் வேகமாக பரவும் நோரோவைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் பொதுவாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. மேலும், மற்றொரு பயணி வாரன் கரியர் தனது தோழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் ஈகொலி Escherichia coli (E. coli) தொற்று உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


