ரமணா தயாரித்து, சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ஆகியோர் இயக்கியுள்ள புதிய படம், 'அந்தோணி'. கயல் வின்சென்ட், டி.ஜே.பானு, சுதர்ஷன், அருள்தாஸ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ள படம் விரைவில் திரைக்கு வருகிறது. ஈழத்தமிழரின் வாழ்க்கை பற்றிய கதை இது.
சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி கலந்துகொண்டு பேசும்போது, "இலங்கையில் ஒரு சினிமா எடுத்து, அந்த படத்தை இங்குள்ள தியேட்டர்களில் வினியோகிப்பது என்பது பெரிய விஷயம்.
ஒரு நாடு போருக்கு பிறகு, சிதைந்த பிறகு, அந்த நாட்டில் வாழ்க்கை என்பது கேள்விக்குறிதான். குண்டு விழுந்த சத்தம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எல்லா வகையிலும் அடக்குமுறையை சந்தித்து வரும் ஜனங்களின் குரல்தான் இந்த படம்.
எதையோ ஒன்றை மறைக்க, எதையோ ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டது. மனித வாழ்க்கையில் எல்லாமே பணமாகிவிட்டது. பார்க்க வைக்கப்படும். கேட்க வைக்கப்படும் உலகத்தில் மக்கள் வாழ்கிறார்கள். நம்மை வேடிக்கை பார்க்க வைத்துவிட்டார்கள். அப்படிப்பட்ட உலகத்தில் ஈழத்து மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக காட்சிப்படுத்தியிருப்பதை வாழ்த்துகிறேன்". என்றார்.


