நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கழிவு கொட்டுபவர்கள் அடையாளப்படுத்தி அபராதம் அறவிடப்படும் பணிகள் நல்லூர் பிரதேச சபையினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகளைக் போடுகின்ற செயற்பாடுகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த ஏற்றமிகு செயற்பாட்டினை முன்னகர்த்துவதற்கு ஏற்றவகையில் பொது இடங்களில் கழிவுகளை போடுபவர்களை அடையாளம் காணப்பதற்கு நல்லூர் பிரதேச சபைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற நல்லூர் பிரதேச செயலகம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இலங்கை மின்சார சபை, மற்றும் கிராம சேவையாளர்கள் அனைவருக்கும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் நன்றிகளை தெரிவித்தார்.
கடந்த ஐந்து மாத காலத்தினுள் நான்கு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் நல்லூர் பிரதேச சபைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
இவ்வாறு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொது இடங்களில் சிலர் கழிவுகள் வீசுகின்ற செயற்பாடுகளை நிறுத்தவில்லை.
எனவே காலத்தின் தேவை கருதி இச் செயற்பாட்டினை முற்றாக நிறுத்துவதற்குரிய கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் குற்றச்செயல்கள் ஏற்படுவதனை குறைக்கும் முகமாகவும் மேலும் பல காண்காணிப்பு கமராக்களினை பொருத்தும் நடவடிக்கையினை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளது.
எனவே பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளவதாகவும் மாறாக தங்களுடைய பொறுப்புணர்வினை உதாசீனம் செய்து பொது இடங்களில் குப்பைகளைப் போடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களது சட்டவிரோத செயற்பாடு எமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருவதாகவும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.


