துருக்கி நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், கைகலப்பாக மாறியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின் போது சர்ச்சைக்குரிய ஒருவரை நீதி அமைச்சராக நியமித்ததே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாகும் என சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.
துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகன், இஸ்தான்புல் தலைமை அரச சட்டத்தரணியான அகின் குர்லெக்கை (Akin Gurlek) புதிய நீதி அமைச்சராக நியமித்திருந்தார்.
குர்லெக் நாடாளுமன்றத்தில் பதவியேற்பதைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்பட்ட போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் காணொளிகளில் பதிவாகியுள்ளன.
புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அகின் குர்லெக், அரச சட்டத்தரணியாக இருந்தபோது பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பல வழக்குகளை முன்னெடுத்தவர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.


