அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமனில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் கூறியதாவது, "ஒப்பந்தம் செய்துகொள்வதில் ஈரான் ஆர்வம் காட்டி வருகிறது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில், இப்பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்றால் தாக்குதல் நடத்தப்படும். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும். முந்தைய அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம்" என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


