• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர் - அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

சினிமா

தமிழ்நாட்டில் அரசியலையும், சினிமாவையும் பின்னிப்பிணைத்தவர் எம்ஜிஆர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து பின்னாளில் உயிருடன் இருந்த வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்த பெருமை எம்ஜிஆருக்கு உண்டு.

முதலமைச்சரான பின்பும் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர்:
அரசியலில் ஈடுபாடு கொண்டு ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும் எம்ஜிஆருக்கு நடிப்பின் மீது தீராத ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அப்போது, அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டு அதற்காக இசையமைக்க ஒப்பந்தமானவர் இளையராஜா.

இதுகுறித்து, மறைந்த கவிஞர் வாலி ஒரு முறை பேட்டியில் கூறியிருப்பதாவது,

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது திடீரென ஒரு நாள் நான் படம் நடிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டார். அதன்பின்னர், அவரை நேரில் சென்று பார்த்தேன். நடிக்கலாம் என்று உள்ளேன். நீங்களே கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதுங்கள் என்றார். என்ன அண்ணே? முதலமைச்சராக இருந்து கொண்டு நடிக்க அனுமதிப்பார்களா? என்று கேட்டேன். அப்போது மொரார்ஜி தேசாய் அரசாங்கம்.

இளையராஜாவை பரிந்துரைத்த எம்ஜிஆர்:
அதெல்லாம் நான் ஏற்பாடு செய்கிறேன். உனக்கென்ன? பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவு செய்து பூஜையை போடு என்றார். நான் சொல்லாமலே அவரே இந்த அன்னக்கிளி எல்லாம் பண்றானே ஒரு பையன் அவன போடலாமா? என்று கேட்டார். போடலாமே என்று சொன்னேன். சரி இளையராஜாவை போடு என்றார்.

உடனே, மாலையில் மாலைமுரசில் இளையராஜா எம்ஜிஆர் படத்திற்கு இசையமைக்கிறார் என்ற செய்தி வந்தது. ஒரு பாடலையும் பிரசாத் ஸ்டூடியோவில் ரெக்கார்ட் செய்தோம். மலேசியா வாசுதேவன் பாடினார். கே. சங்கர் டைரக்ஷன்.

அனுமதி கொடுத்த பிரதமர்:
எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் ஒரு முதலமைச்சர் எப்படி
நடிக்கலாம்? என்று பெரிய விஷயம் ஆக்கிவிட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டியவர் ஆளுநர் பட்வாரி, அவரை வரவிடாம தடுத்து நிறுத்திட்டாங்க. பூஜைக்கு வரவில்லை அவர். அதன்பின்னர், எம்ஜிஆர் மொரார்ஜி தேசாயை பார்த்துள்ளார்.

மறுநாள் எம்ஜிஆர் எனக்கு போன் பண்ணார். நீங்க இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பாருங்க என்றார். பிரதமர் மொரார்ஜி தேசாய் முதலமைச்சர் எம்ஜிஆர் நடிக்க அனுமதி என்று செய்தி இருந்தது.

இவ்வாறு அவர் அந்த நேர்காணலில் கூறியிருப்பார்.

கைவிடப்பட்டது ஏன்?
அவ்வாறு எம்ஜிஆர் நடிப்பில் இளையராஜா இசையமைக்க ஒப்பந்தமான படம்தான் நான் உன்னை விடமாட்டேன். 1978ம் ஆண்டு அந்த படத்தின் பணிகள் தொடங்கியது. ஆனால், தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக எம்ஜிஆர் நடிப்பில் உருவாக இருந்த அந்த படம் கைவிடப்பட்டது.

அவர் முதலமைச்சராக இருந்து கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தினால் மக்கள் பணி தடைபடும் என்ற தொடர் விமர்சனங்கள் எழுந்ததால் அந்த படம் கைவிடப்பட்டது. அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தால் எம்ஜிஆருக்கும் இசையமைத்த பெருமையை அவர் பெற்றிருப்பார்.

எம்ஜிஆருக்காக இசையமைத்த பாடலைத்தான் உன்னால் முடியும் தம்பி படத்தில் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த படத்தில் இடம்பிடித்த என்ன சமையலோ பாடல்தான் அந்த பாடல் என்றும் தகவல்கள் உண்டு. 

தமிழச்சி கயல்விழி
 

Leave a Reply