டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக, இலங்கை தனது தேயிலைக்கான சர்வதேச சந்தைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுஷாந்த டி சில்வா எச்சரித்துள்ளார்.
சூறாவளி காரணமாக சுமார் ஒரு மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய தேயிலைத் தேவையை ஈடுசெய்வதில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கையின் விநியோகம் குறையும் பட்சத்தில், சர்வதேச கொள்வனவாளர்கள் ஏனைய நாடுகளை (இந்தியா, கென்யா போன்றவை) நாடும் அபாயம் உள்ளது.
கடந்த 15-20 ஆண்டுகளில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கான பிரதான ஏற்றுமதியாளராக இலங்கை இருந்தபோதிலும், தற்போது அந்த சந்தைகளை ஓரளவு இழந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சவால்கள் நிலவினாலும், இலங்கை தொடர்ந்தும் 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தேயிலையை ஏற்றுமதி செய்து வருகின்றது.
இவற்றில் ரஷ்யா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் முன்னணியில் உள்ளன.
2024 ஆம் ஆண்டில் 245.7 மில்லியன் கிலோவாக இருந்த ஏற்றுமதிஇ 2025 இல் 257.44 மில்லியன் கிலோவாக (11.65 மில்லியன் கிலோ உயர்வு) அதிகரித்துள்ளது.
சீன சந்தை இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக உருவெடுத்து வருவதாக லுஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
சீனா ஒரு மிகப்பெரிய சந்தை. அங்குள்ள 1.4 பில்லியன் மக்களில் வெறும் 5 வீத பங்கினை நாம் பெற்றுக்கொண்டாலும், அது இலங்கைத் தேயிலைத் துறைக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என அவர் விளக்கினார்.


