புதுச்சேரி யூனியன் பிரதேசம் மது விற்பனைக்கு பெயர் பெற்ற பகுதி. தமிழ்நாட்டை ஒப்பிடும் போது புதுச்சேரியில் குறைந்த விலையில், நிறைய பிராண்டுகளில் மதுபான வகைகள் கிடைப்பதும், அழகிய கடற்கரை நகரமாக இருப்பதும் தான்.
மதுப்பிரியர்களை பக்கத்து மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரி நோக்கி வருகின்றனர்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சொல்லவே வேண்டாம். பெங்களூருவில் இருந்து பைக்கிலேயே புதுச்சேரிக்கு பெண் தோழிகளுடன் படையெடுக்கின்றனர்.
புதுச்சேரியின் அடையாளங்களில் மதுவுக்கு ஓர் இடம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக மது விற்பனைத் துறையின் வருவாய் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு அது ரூ.1,100 கோடியாக உயர்ந்தது. தென்னிந்தியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் புதுச்சேரியும் இடம்பெற்றுள்ள நிலையில் பண்டிகை நாட்களை கடந்து தற்போது சிறப்பு (விசேஷ) தினங்களுக்கான சலுகைகளையும் மதுபான கடைகள் அறிவித்து வருகின்றன.
பொதுவாக விசேஷ நாட்களில் துணிக்கடை, இனிப்புக் கடை என பல கடைகளில் அதிரடி சலுகை விலை தருவார்கள். அதுபோல் புதுச்சேரியில் காதலர் தினத்தையொட்டி மதுக்கடை ஒன்றில் சலுகை ஆபர் அறிவித்து போர்டு வைத்திருந்தனர். அதில் ஒரு முழு பாட்டில் (புல்) ஒயின் வாங்கினால் 4 டின் பீர் இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் வேகமாக பரவியதால் தகவலறிந்த கலால் துறை அதிகாரிகள் அந்த மது கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் காதலர் தினத்தையொட்டி மதுக்கடைகளில் சலுகை விலையில் மது விற்கக்கூடாது என எச்சரித்தனர். இதையடுத்து இந்த அதிரடி சலுகையை கடைக்காரர்கள் நிறுத்தி விட்டனர். இதனால் மதுபிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


