உள்நாட்டு தபால் கட்டணங்களை இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க தபால் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு நிலையான கடிதத்திற்கான கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பதிவு கட்டணம் ரூ.60 என்ற விலையில் மாறாமல் உள்ளது.
சாதாரண மற்றும் வணிக கடிதங்களுக்கான ஆரம்ப எடை வகை 20 கிராமிலிருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒரு துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பிற்கான அதிகபட்ச எடை 100 கிராமிலிருந்து 120 கிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கான தபால் கட்டணம் முன்பு ரூ.30 ஆக இருந்தது.
தற்சமயம் அது 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுகள் மற்றும் அரசுத் துறைகளுக்கு வழங்கப்படும் சிறப்புப் பதிவு சேவைக்கான கட்டணம் ரூ.110-ல் இருந்து ரூ.130 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒரு அஞ்சல் அட்டையின் விலை ரூ.20-ல் இருந்து ரூ.40 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், நிலையான பொதிகள் மற்றும் இலங்கை தபால் கூரியர் சேவைக்கான கட்டணங்கள் மாறாமல் இருக்கும் என்றும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.


