யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழி மறித்த போது, பொலிசாரின் கட்டளையை மீறி சாரதி டிப்பர் வாகனத்தை தொடர்ந்து செலுத்தியுள்ளார்.
அதனை அடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்ற நிலையில் , சாரதி டிப்பர் வாகனத்தை மணலுடன் வீதியில் நிறுத்தி விட்டு , வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.
தப்பியோடிய சாரதியை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்தனர்.
கைது செய்த சாரதியை பொலிஸார் விசாரித்த வேளை , குறித்த நபர் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்தில் பொலிஸ் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மேலதிக விசாரணைகளில் , பொலிஸ் உத்தியோகத்தில் இருந்த வேளை பொலிசருடன் இருந்த நெருக்கத்தினை பயன்படுத்தி , சட்டவிரோத மணல் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
குறித்த நபரை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


