அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட 59 வயதான ராயன் ரௌத்திற்கு (Ryan Routh) ஆயுள் தண்டனை விதித்து புளோரிடா நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி, புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள ட்ரம்பிற்குச் சொந்தமான கொல்ஃப் மைதானத்தில் நிகழ்ந்தது.
டொனால்ட் ட்ரம்ப் கொல்ஃப் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த புதர்களுக்குள் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ராயன் ரௌத்தை அமெரிக்க இரகசிய சேவை (Secret Service) அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்நிலையில் அதிகாரிகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததையடுத்து, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அதன் பின்னர், சிவில் சாட்சி ஒருவரின் உதவியுடன் அவரது வாகன இலக்கத்தை வைத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
குறித்த வழக்கில், ராயன் ரௌத்தின் செயல் "முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மற்றும் தீய எண்ணம் கொண்டது" எனக் குறிப்பிட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புளோரிடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


