TamilsGuide

எம்.ஜி.ஆர் டைரக்ட் செய்த முதல் படம் நாடோடி மன்னன்

உழைப்பால் உயர்ந்து வளர்ந்து புகழ் பெற்று பெருமைக்குரியவராகத் திகழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறித்து அவர் ஒரு சிறந்த டைரக்டர் என்ற எனது கருத்தை வளர்ந்து வருகின்ற ஒரு டைரக்டர் என்ற நிலையில் வெளியிட விரும்புகிறேன்.

அவர் டைரக்ட் செய்த முதல் படம் நாடோடி மன்னன். அது போன்ற ஒரு பிரமாண்டமான ஒரு வெற்றிப்படத்தை டைரக்சனில் முழுமையாகத் தெரிந்தவர்கள் மட்டும்தான் எடுக்க முடியும். அது ஓரு இரட்டை வேட கதை. 'டேக்கிங்' சைடில் ஒவ்வொரு ஷாட்டும் முழுமையாக இல்லாவிட்டால் அந்த அளவுக்கு நன்றாகயிருக்காது. ஆகவே முழுத்திறமை இருந்ததால்தான் அந்த படத்தை வெற்றிகரமாக சிறப்பாக எடுக்க அவரால் முடிந்தது.

அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தது போல, "ஓடினால் மன்னன்; இல்லையென்றால் நாடோடி" என்பது போல்தான் எடுத்திருந்தார். இது போல் செய்ய எவ்வளவு துணிவு வேண்டுமென்று இந்த தொழிலில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். படம் வெளியான பின்பு அவரது திறமை எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு மன்னனாக முடி சூட்டப்பட்டார்.

'அடிமைப் பெண்' படத்தில் சிங்கத்துடன் சண்டை போடுவது போன்ற காட்சியை எடுக்க நிறைய பிலிம் செலவழிந்திருக்கும்.ஆனால் அதனை உரிய முறையில் எடிட் செய்து எடிட்டிங்கினா ல் மட்டும் ஒருகாட்சியை எவ்வளவு விறுவிறுப்பாக செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்திருப்பார்.

நாங்கள் வெளிநாடு சென்று படம் எடுத்த பொழுது அதில் என்ன என்ன கஷ்டங்கள் என்பதை அனுபவித்து பார்த்தோம். ஆனால் எங்களை விட அதிகமாக ஜப்பான் சென்று 'எக்ஸ்போ' காட்சிகளை படமாக்கி அவர் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை எடுத்திருப்பார்.

தொழில் செய்யலாம். ஆனால் தொழிலை ரசிப்புத் தன்மையோடு அனுபவித்து செய்வது சிலர்தான். அந்த வெகு சிலரில் மக்கள் திலகம் முக்கியமானவர். அவர் படங்கள் எல்லாம் மிகுந்த பொருட் செலவில் தயாரான தரமான படங்கள்.

ஒவ்வொரு துறையிலும் தனக்கான ஒரு தனி இடத்தை தேடிக் கொண்டது போல டைரக்சன் துறையிலும் அவருக்கென ஒரு தனியிடம் உண்டு.

- இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.07.83 இதழ்)

Leave a comment

Comment