TamilsGuide

எம்.ஜி.ஆருக்கு சக நடிகர்கள் யாரையும் மற்றவர்கள் கிண்டல் செய்வதோ, குறை கூறுவதோ பிடிக்காது.

புதிய நடிகர்களை உற்சாகப் படுத்தி வாழ்த்துவார். வி.எஸ்.ராகவனும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட ஒரு படப்பிடிப்பு.
காட்சிப்படி மாடிப்படிகளில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்கி வரவேண்டும். அப்போது, வாசலில் வரும் தபால்காரர் ‘சார் போஸ்ட்’ என்று கூறி எம்.ஜி.ஆரிடம் தபாலைத் தர வேண்டும். தபால்காரர் வேடத்தில் நடித்தவர் புதுமுக நடிகர். ‘சார் போஸ்ட்’ என்ற இரண்டே வார்த்தைகள்தான் அவருக்கு வசனம். என்றாலும் பதற்றத்தில் இருந்தார். ‘‘தம்பி, எம்.ஜி.ஆரு டன் நடிக்கிறே. ஜாக்கிரதை’’ என்று இயக்குநர் ப.நீலகண்டன் வேறு எச்சரித்ததில் அவரது பதற்றம் அதிகரித்தது.
படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்ட படி, எம்.ஜி.ஆர். புயலாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தார். பதற்றத்தில் இருந்த தபால்காரராக நடித்த புதுமுக நடிகர், எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘சார் போஸ்ட்’’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘‘சார் பேஸ்ட்’’ என்று சொல்லிவிட்டார். செட்டில் சிரிப்பலை எழுந்தது. அதை அடக்கியபடி ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல். ‘‘நிறுத்துங்க. ஒரு நடிகர் தப்பு

பண்ணிட்டா இப்படித்தான் சிரிக்கிறதா? நாம எல்லாம் தப்பே பண்ணலையா? யாரையும் கிண்டல் பண்ணாதீங்க’’ என்று வெடித்தார். செட்டில் மயான அமைதி!
பின்னர், அந்த புதுமுக நடிகரை தனியே அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தோளில் கைபோட்டபடி,
‘‘கவலைப்படாதீங்க. சரியா நடிங்க.
உங்களால் முடியும்’’ என்று உற்சாகப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அந்த நடிகர் சரியாக நடித்தார். ஷாட் ஓ.கே. ஆனது.
உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்த நடிகரைத் தூக்கி வாழ்த்திய எம்.ஜி.ஆரின் பண்பைப் பார்த்து
வி.எஸ். ராகவன் சிலிர்த்துப் போனார்.
தகவல் களஞ்சியம்!
- பிரசாந்த் !

 

Leave a comment

Comment