TamilsGuide

 என் சிகிச்சைக்காக செலவை அவரே ஏற்று கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் - அறிஞர் அண்ணா 

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அண்ணா சென்றார். சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பி வந்தார். அப்போது சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு ஒன்றை முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அந்தப்பதிவு இதுதான், 'அண்ணா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்தநாயகி கேள்வி நேரத்தில் அண்ணாவை நோக்கி ஒரு கேள்வி எழுப்பினார். முதல்வர் அவர்களே நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவு ஆனது. அது உங்கள் சொந்த பணமா? அல்லது அரசு பணமா? அல்லது உங்கள் கட்சி செலவா? என்று கேட்டார்.
அண்ணா சபையை சுற்றி பார்த்து உங்கள் இந்த கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன் என்ற உடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர். மறுநாள் சட்டப்பேரவை கூடியதும் அதே கேள்வி நேரத்தில் நேற்று எனது கேள்விக்கு என்ன பதில் என்று அனந்தநாயகி மீண்டும் கேட்டுள்ளார்.

அண்ணா சிரித்துக்கொண்டே அவரது கேள்விக்கு பதிலளித்துள்ளார். எனது சிகிச்சை முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை. தமிழக அரசும் கொடுக்கவில்லை. எங்கள் கட்சியும் அந்த செலவை ஏற்கவில்லை. செலவான தொகை ரூபாய் ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்( இ‌ன்றைய மதிப்பில் பல கோடிகள்) மொத்தமும் இங்கே இதோ சட்டமன்ற உறுப்பினர் ஆக அமர்ந்து இருக்கிற என் அன்பு தம்பி எம்ஜிஆரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை எனக்காக என் சிகிச்சைக்காக செலவை அவரே ஏற்று கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ என ஆதாரத்தை காட்டியுள்ளார்.
நேற்று அவர் அவைக்கு வரவில்லை அவர் முன்னால் இந்த விளக்கத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை என்ற உடன் சட்டமன்ற அவையில் பலத்த கரவொலி எழுந்துள்ளது. வாழ்க்கையின் அனைத்து விநாடிகளையும் செதுக்கி செதுக்கி தன்னை பக்குவ
படுத்தி கொண்டவர் எம்ஜிஆர்.
பட்டினியில் கிடந்த போதும் சரி பணம் மழை போல அவர் வாழ்வில் கொட்டிய போதும் தன்னிலை தவறாதவர் எம்ஜிஆர். அண்ணா சிகிச்சைக்கான தொகையை ஏற்று கொண்டதாக ஒரு போதும், எம்ஜிஆர் ஒரு நாளும் ஒரு இடத்தில் கூட சொன்னது இல்லை. அறிஞர் அண்ணா சொன்ன பிறகே நாட்டுக்கு இந்த உண்மை தெரிந்தது...
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!
அறிஞர் அண்ணா நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

 

Aiyappa Bas
 

Leave a comment

Comment