TamilsGuide

விஜய் நடித்த ஜனநாயகன் தாமதம் - 100 கோடி இழப்பை சந்தித்த திரையரங்குகள்

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜனநாயகன்' படம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

சர்வதேச அளவில் வெளியாக இருந்த 'ஜனநாயகன்' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. இதை தொடர்ந்து படம் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைப்பதாக அறிவித்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றும் படம் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது.

'ஜனநாயகன்' படம் வெளியாகும் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

'ஜனநாயகன்' படம் வெளியிடுவது ஜாக்பாட் என காத்திருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு இதனால் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. சமீபகாலமாக திரையரங்குகள் ஓ.டி.டி. பாதிப்பு மற்றும் பார்வையாளர்களின் வரத்து குறைவினால் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் 'ஜனநாயகன்' படத்தினால் நிம்மதி பெருமூச்சு விடலாம் என ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் 'ஜனநாயகன்' படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை உருவாக்கி உள்ளது.

இது குறித்து திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறும் போது, 'தமிழக திரையரங்குகள் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒற்றை திரையரங்குகள் பல மூடப்பட்டு வருகிறது. படங்களின் வெளியீட்டில் சரியான அட்டவணையை தயாரிப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். தொழில்துறையில் உள்ள பிரச்சனைகளை ஒன்றிணைந்து தீர்க்க வேண்டும்.

பைசன், டியூட், ஆண்பாவம் பொல்லாதது போன்ற படங்களுக்கு பிறகு திரையரங்குகளில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. 'ஜனநாயகன்' படம் திரையரங்கத்தை மீண்டும் உயிர்பித்திருக்கும். பொங்கல் விடுமுறை 10 நாட்கள் இருந்தது. ஜனநாயகனுக்கு அது சரியான நேரமாக இருந்தது. ஆனால் 'ஜனநாயகன்' படத்தின் தாமதத்தால் தமிழக திரையரங்குகள் ரூ.100 கோடி வரை இழப்பை சந்தித்து உள்ளன என்றார்.

தமிழ்நாடு திரையரங்குகளை பொறுத்தவரை விஜய் நடித்த கடைசி படம் 'ஜனநாயகன்' என்பதால் வசூலை பொறுத்தவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கையுடன் திரையரங்க உரிமையாளர்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 

Leave a comment

Comment