திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக திருகோணமலையைச் சேர்ந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி, திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுவதற்கு அதிகாரிகள் முற்பட்டபோது அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
குறித்த கட்டுமானங்கள் உரிய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தது.
சிலையை அகற்ற முயன்றபோது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்கள் பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த வழக்குடன் சம்பந்தப்பட்ட 9 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.


