நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி நுவரெலியா பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி , போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவினர் , இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் அபராதம் செலுத்த தேவையான அனைத்து வசதிகளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது இதன் ஒரு கட்டமாக நுவரெலியாவில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது பொலிஸாருக்குரிய தேவையான நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டது .
இதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக பணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சமர்பிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .
இதன் பின்னர் பணம் செலுத்திய தகவல்கள் உறுதிப்படுத்திய பின்னர் அவ்விடத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெற்றுக் கொள்ளும் வசதிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர் .
இதன் மூலம் வாகன விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்படும் சாரதிகள் இனி அபராதம் செலுத்துவதற்காக அலுவலகங்களுக்குச் சென்று நேரத்தை விரயமாக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அதிகாரிகள் தெளிவு ப்படுத்தினர்.
குறித்த திட்டம் அறிமுகம் செய்வதற்கு முன்னர் போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரால் விதிக்கப்படும் அபராதத் தொகை தபால் அலுவலகத்திலேயே தற்போது செலுத்தப்படுகின்றது அபராதத்தை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்ததன் பின்னரே சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெறும் நிலை இருந்தது .


