TamilsGuide

சர்வதேச மாணவர்கள் மீதான கட்டுப்பாடுகளால் கனேடிய மக்கள்தொகை மீது ஏற்பட்டுள்ள தாக்கம்

கனடா அரசு சர்வதேச மாணவர்கள் மீது விதித்துவரும் கட்டுப்பாடுகள், கனேடிய மக்கள்தொகை அதிகரிப்பின் மீது குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கனடா புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளிலிருந்து, 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், மெட்ரோபாலிட்டன் பகுதிகளில், மக்கள்தொகை 1 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேபோல, சிறிய நகரங்களில் 0.9 சதவிகிதமும், கிராமப் பகுதிகளில் 0.7 சதவிகிதமும் மட்டுமே மக்கள்தொகை அதிகரித்துள்ளது.

தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்படுவது குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.

இந்நிலையில், சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், ஒன்ராறியோவில் கல்வித்துறையில் சுமார் 10,000 பணியாளர்கள் பணியை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

அத்துடன், கல்லூரிகளை நடத்த நிதி பிரச்சினைகளும் உள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் கணிசமான அளவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் அரசியல் செய்வதற்காக புலம்பெயர்ந்தோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அரசு புலம்பெயர்ந்தோர் மீது கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டே இருக்கிறது.

விளைவு? மக்கள்தொகை குறைவு, கல்லூரிகளுக்கு நிதி பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கத் துவங்கியுள்ளது கனடா!
 

Leave a comment

Comment