திமுக சட்டமன்ற உறுப்பினர் பருதி இளம்வழுதி ஒருமுறை சட்டசபையில் "உங்களுக்கு விமர்சனத்தை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை" என முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களை பார்த்து நேரடியாக விமர்சிக்கிறார்.
"எனக்கு எதிரில் இருக்கும் உங்களைவிட (எதிர் கட்சிகள்) எனக்கு பின்னால் அமர்ந்திருப்பார்கள் ( ஆளுங்கட்சி ) என்னை அதிகம் விமர்சித்திருக்கிறார்கள், காயப்படுத்தியிருக்கிறார்கள். அந்த விமர்சனங்களையெல்லாம் பெரிதுபடுத்தி நான் சோர்ந்து போயிருந்தால் நான் உங்கள்முன் முதலமைச்சராக இந்த அவையில் நின்றுகொண்டிருக்க முடியாது" என பதில் சொல்கிறார்.
பின்னாளில் அந்த கேள்வியை கேட்ட பரிதி இளம்வழுதி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் இணைந்தார் என்பது வேறுகதை
அவர்
செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்
பத்தோடு பதினொன்றாக கடந்துபோகக்கூடிய சாதாரண பெயர் அல்ல இது.
அவர் முன்பு சொன்னது போல அவர் பெற்றோர் வைத்த ஜெ.ஜெயலலிதா என்ற பெயரே மறைந்துபோகும் அளவிற்கு 'அம்மா' என்ற அடையாள பெயருக்கு மாறிப்போனார்.
ஒரு கோடி தொண்டர்களுக்கும் மேற்பட்ட தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியை பல்வேறு இடர்களுக்கு ஊடாக கட்டிக்காப்பாற்றி இன்று ஆல விருட்சமாக அதை மாற்றியிருக்கிறார்...
அரசியல் கடுமையானது.
அந்த அரசியல் பெண்களுக்கு மிகவும் கடுமையானது.
ஒரு பெண் அரசியலின் உச்சத்திற்கு போவது என்பது அத்தனை எளிமையானது அல்ல.
அதனையும் மீறி ஒரு பெண் அதிகாரத்தை அடையும்போது அந்த வெற்றியின் பின்னனியில் இருப்பது வேதனைகள், அவமானங்கள், தோல்விகள் மற்றும் விடா முயற்சி மட்டுமே!
ராஜாஜி காலம் முதல் தற்போதைய காலம்வரை அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பல ஜாம்பவான்களை கொண்ட பகுதியில் அவர்களுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்தது சாதாரண காரியம் அல்ல.
இவர் வாழ்வில் அதால பாதாள வீழ்ச்சி, எதிரிகளும் வியந்து பார்க்கும் வளர்ச்சி என இரு முனைகளையும் தொட்டிருக்கிறார்.
அவர் உயிரோடு இருந்தவரை தமிழக அரசியலின் மையப்புள்ளி இவர். ஒன்று இவரை ஆதரித்தோ அல்லது இவரை எதிர்த்துதான் அரசியல் செய்ய முடியும்.
'சமூக நீதி காத்த வீராங்கனை ' என்ற பெயர் சமூகநீதி உள்ளவரை இருக்கும்.
அம்முவாக பிறந்து 'அம்மா'வாக மக்களின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் அடையாளம் 'செல்வி ஜெ.ஜெயலலிதா' அவர்கள்
- என்றும் நீங்கா நினைவுகளோடு
VR S Selvendhiran


