TamilsGuide

இங்கிலாந்தில் பலருக்குத் திட்டமிட்டு HIV பரப்பிய நபர்

இங்கிலாந்தில் இளைஞர்கள் பலருக்குத் திட்டமிட்டு எச்.ஐ.வி (HIV) தொற்றைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், அவர்களுடன் உறவு கொள்வதற்கு முன்பே தனது உடல்நிலை குறித்துத் தெளிவுபடுத்தியதாகவும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆடம் ஹால் என்பவர் மீது, இணையத்தளம் மற்றும் மதுபான விடுதிகள் மூலம் அறிமுகமான ஏழு இளைஞர்களுக்குத் திட்டமிட்டு எச்.ஐ.வி தொற்றைப் பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதோடு , ஐந்து பேரை வன்புணர்வு செய்ததாகவும், அவர்களுக்கு அபாயகரமான போதைப்பொருட்களை வழங்கியதாகவும் சந்தேக நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் நியூகேஸில் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், ஆடம் ஹால் முன்னிலையாகி சாட்சியமளித்தார். அப்போது அரச தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலுமாக மறுத்தார்.

நான் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவன் என்பதை யாரிடமும் மறைக்கவில்லை. குறிப்பாக, ஐந்தாவது முறைப்பாட்டாளரை சந்தித்தபோது, உறவு கொள்வதற்கு முன்னரே எனது மருத்துவ நிலை குறித்துத் தெரிவித்துவிட்டேன்.

அதற்கு அவர், தான் ஏற்கனவே முன்னெச்சரிக்கை மருந்துகளை எடுத்து வருவதாகவும், அதனால் இது ஒரு பெரிய விடயமல்ல என்றும் பதிலளித்தார்." என குற்றஞ்சாட்டப்பட்டவர் கூறினார்

ஆடம் ஹால் 2010 ஆம் ஆண்டிலேயே எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் முறையாக மருந்துகளை உட்கொள்ளாமல், வேண்டுமென்றே பாதுகாப்பு உறையின்றி மற்றவர்களுடன் உறவு கொண்டதாக காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ஹால், "நான் முறையாக மருந்து உட்கொண்டு வருவதால், என்னிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்று பரவும் வாய்ப்பு மிகக் குறைவு.

யாருக்கும் தீங்கு இழைக்கும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை" என்று தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவ்ல்கள் கூறுகின்றன.     

Leave a comment

Comment