சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூபா 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த (22) ஆம் திகதி சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பி செல்வதற்காக உழவு இயந்திரத்துடன் வீதி வழியாக சென்ற போது குறித்த சோதனை நடவடிக்கையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் 3 உழவு இயந்திரங்கள் உட்பட 3 சந்தேக நபர்களையும் மணலுடன் கைது செய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பின்னர் இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட 3 உழவு இயந்திரத்தில் ஒரு உழவு இயந்திரம் மேல் விரிப்பு இன்றி ஏற்றப்பட்ட மணலை பாதுகாப்பு குறைபாட்டுடன் கொண்டு சென்றமையினால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இன்று கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரங்கள் மற்றும் கைதான மூவர் அடங்கலாக சான்றுப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூபா 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.
குறித்த சோதனை நடவடிக்கையில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனையின் பிரகாரம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பெரேரா வழிகாட்டலில் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் மல்வத்தை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


