கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகார சபை, குறித்த பாறையின் தாய்ப் பாறைக்குள் “லெப்ரடோரைட்” (Labradorite) எனப்படும் கனியத்தின் சிறிய அளவு படிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
லெப்ரடோரைட் கனியம், ஒரு வகையிலான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர், கண்டி – கலஹா, தெல்தோட்டை தோட்டத்திலுள்ள கல்லந்தென்ன ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இருந்த கருங்கற்பாறை ஒன்றில் நீல நிற இரத்தினக்கல் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதற்கமைய, அந்தப் பாறையை பரிசோதிப்பதற்காக நேற்று இரவு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
பின்னர் அவர்கள் அந்தப் பாறையிலிருந்து மூன்று மாதிரித் துண்டுகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
அதனடிப்படையிலேயே அது தொடர்பான அறிக்கை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.


