மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணைப்பகுதியில் கடந்த காலங்களில் வீதிகளில் குப்பைகளை கொட்டிச்செல்லும் நிலை அதிகரித்துக்காணப்பட்டது.
குறிப்பாக இரவு வேளைகளில் வாகனங்களில் வந்து துறைநீலாவணை பிரதான வீதியில் குப்பைகளை கொட்டிச்செல்லும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த நிலையில் இது தொடர்பில் துறைநீலாவனை பிரதேச மக்களினால் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பிரதேசசபையில் முன்வைக்கப்பட்டுவந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் துறைநீலாவணை பிரதேச மக்களும் துறைநீலாவணை வட்டார பிரதேசசபை உறுப்பினர் இளமாறனும் தொடர்ச்சியான அவதானிப்பில் ஈடுபட்டுவந்த நிலையில் நேற்று இரவு வட்டா ரக வாகனத்தில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதை அவதானித்த நிலையில்அவர்களை மடக்கப்பிடித்துள்ளனர்.
இது தொடர்பில் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் ரவிகரனுக்கு; மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த தவிசாளர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த பட்டா வண்டியை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
இதன்போது பிடிக்கப்பட்ட இரு நபர்களையும் கைப்பற்றப்பட்ட வாகனத்தினையும் வழக்கு தாக்கல் செய்வதற்காக களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் தெரிவித்தார்.
துறைநீலாவணைக்கு செல்லும் பிரதான வீதியில் தொடர்ச்சியாக கொட்டப்படும் கழிவுகளினால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதுடன் அருகிலுள்ள வயல்களும் நீர்நிலைகளும் பாதிக்கப்படும் நிலைமைகளும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


