எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்றபோதிலும் அதற்கு மாறான செயற்பாடுகளே வடகிழக்கில் நடைபெறுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கல்வி சீர்திருத்தம் முக்கியமாக கருதப்படுகின்றபோதிலும் சமூகக்கல்வி பாட புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலே ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் மறைந்த எமது தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் அடுத்த பொங்கலுக்கிடையில் தீர்வு கிடைக்கும், அடுத்த தீபாவளிக்கிடையில் தீர்வு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லக்கூடிய விதத்திலே தமிழர்களின் அரசியல் நிலவரம் இருந்தது. பலர் அது தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்தார்கள், பகிடியாக பேசினார்கள்.
இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விடயம் என்னவெனில் எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் நிரந்தரமான கௌரவமானதொரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்தக் காலத்தில் அரசியலில் ஈடுபட்டார்.
2026இல் நடக்கும் கல்வி மறுசீரமைப்பில் கூட மாணவர்களின் வரலாற்றுநூல்களில் இவற்றினை சரிசெய்யாவிட்டால் எதிர்வரும் 30,40வருடத்தில் இந்த நாட்டில் தமிழர்களின் வரலாறு தெரியாத நிலையே மாணவர்களுக்கு ஏற்படும்.
இந்த நாட்டில் பல சிங்கள மக்களின் எண்ணம் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் வந்தேறு குடிகள் என்றாகும்.இங்கு நீங்கள் வாழமுடியாது தமிழ்நாட்டுக்கு செல்லுங்கள் என்று பலர் கூறுவார்கள். இந்த நாட்டின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பது அறியாத நிலையே இந்த நாட்டில் காணப்படுகின்றது.பிரித்தானியாவின் காலப்பகுதியில் வேறுநாடுகளிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதே இந்த நாட்டில் உள்ள பல சிங்களவர்களின் எண்ணமாகவுள்ளது. இதனை மாற்றியமைப்பதற்கான சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்திஅரசாங்கம் இனவாதமில்லாத கட்சி,இனவாதம் இல்லாத ஆட்சி என்று கருதினால் இதனை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.இதன்காரணத்தினால்தான் இலங்கை தமிழரசுக்கட்சி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான கடிதத்தில் கையொப்பம் இடுவதில்லையென்ற தீர்மானத்தினை எமது கட்சி எடுத்திருந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமாக அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தோ,பிரதமருக்கு எதிராக வாக்களித்தோ அரசாங்கம் மாறப்போவதுமில்லை,எதுவும் நடைபெறப்போவதுமில்லை.ஆனால் தமிழர்களின் வரலாற்றினை பாடப்புத்தகத்தில் உள்ளடக்கவேண்டும் என்ற வகையிலான அழுத்தங்களை வழங்குவதற்காவது இதனை ஒரு நிபந்தனையாக முன்வைக்கவேண்டும் என்பதே எனதுநிலைப்பாடு.
கல்வி மறுசீரமைப்பு என்பது முக்கியமானதும் அவசியமானதுமான விடயம்.ஆனால் இதனை எவ்வாறு செய்யவேண்டும் என்பது தொடர்பில் தமிழர்கள் தரப்பிலிருந்தும் கருத்துகளை உள்வாங்கி மேற்கொள்ளவேண்டும்.என்றார்.


