நாட்டிற்குப் பொருத்தமான சிறந்த பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சித்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளியினால் பாதிப்புக்குள்ளான சிலாபம் சேனாநாயக்க தேசிய பாடசாலையை பிரதமர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அத்துடன் அகில இலங்கை ரீதியில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்த போது ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திற்கு நான் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர்,நாடாளுமன்றத்திலுள்ள நூலகத்தில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதங்களை வாசித்துப் பார்த்தேன்.
அதில் சில தலைவர்களின் கூற்றுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலவசக் கல்வியினால் தமது தோட்டத்தில் ஒரு தேங்காயைப் பறித்துக்கொள்வதற்கு, படிப்பறிவற்ற ஒருவரைத் தேடிக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அவர்கள் நாடாளுமன்ற விவாதங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதனை காரணம் காட்டி இலவசக் கல்வியை அன்று எதிர்த்திருந்தனர்.
மாணவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் மிக உயர்ந்த நிலைகளை எட்டக்கூடிய
ஒரு பொருத்தமான சூழலையும் கல்வி முறைமையையும் உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
தனக்காக மாத்திரம் அல்லாது தான் சார்ந்த சமூகத்தை மாற்றுவதற்கும்,சமூகத்திற்குத் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும்,
ஒரு நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும்,பிறரைப் புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள,
மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதையே எமது கல்விக் கொள்கையின் மூலம் நாம் எதிர்பார்க்கின்றோம்.
இத்தகைய சிறந்த வரலாற்றைக் கொண்ட பாடசாலையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். நாட்டுக்கு மாத்திரமன்றி உலகிற்கே முக்கியமான ஒரு பாடசாலையாக இதனை மாற்றியமைக்க உங்களால் முடியும் என நான் நம்புகின்றேன்.
பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு முகம் கொடுத்த சிலாபம் கல்வி வலயத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அதற்கான சக்தியும் தைரியமும் இருக்கின்றது


