TamilsGuide

வேலணை மக்களின் துன்பங்கள் தீரும் காலம் வெகு தொலைவில் இல்லை

யாழ் வேலணையில் ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்காவின் காலடி பட்டமை அங்கு வாழும் மக்களின் துன்பங்கள் வெகு விரைவில் நீங்கி விடும் என்பதற்கான அறிகுறி என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நேற்று வேலணை பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழில் தீவகப் பகுதிகளில் ஒன்றான வேலணை அங்கு வாழும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எமது ஆட்சியில் தீவக அபிவிருத்தியில் அதி முக்கிய கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.

கடந்த ஆட்சிகளை போல் அல்லாது நாட்டினுடைய மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களை தேடி எமது அரசாங்கத்தின் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறான ஒரு அபிவிருத்தி திட்டத்தில் வேலணையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்காக அண்மையில் ஜனாதிபதி அடிக்கல் நாட்டி இருந்தார்.

கிரிக்கெட் மைதானத்தை வேலணையில் அமைப்பதன் மூலம் வேலனை  என்ற பெயரை சர்வதேசம் வரை அறியச் செய்தவர் வேறு யாரும் அல்ல எமது நாட்டின் தலைவர் அனுரகுமார திசாநாயக்காவே.

எமது அரசாங்கத்தை பற்றி பலர் கேலி செய்தார்கள் அரசாங்க அதிகாரிகள் எம்மோடு ஒத்துழைக்க மாட்டார்கள் ஆட்சி நடத்துவது கடினம் என்றார்கள்.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் அத்தனை விடயங்களையும் சிதறடிக்கும் வகையில் அரச அதிகாரிகள் இரவு பகலாக எம்மோடு இணைந்து அனர்த்தத்தை வெற்றி கொள்வதற்கு அரும்பாடு பட்டார்கள்.

ஆகவே எமது அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம் திருடர்களுக்கான அரசாங்கம் கிடையாது மக்களிடம் இணைந்து பயணிக்க போது பலவற்றை சாதிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Comment