முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி ஆகிய பகுதிகளிலுள்ள காணிகளிலிருந்து, காணிகளுக்குரிய மக்களை வெளியேறுமாறு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தால் பல காணிகளுக்கு முன்பாக அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக மக்கள் குடியிருக்கின்ற காணிகள் மற்றும் மக்களால் உப உணவுப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தும் காணிகள் உட்பட 62பேருடைய காணிகளுக்கே இவ்வாறு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தால் இவ்வாறு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுதொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு அப்பகுதிமக்களால் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதேசசெயலகத்தால் குறித்த சிக்கலுக்குரிய காணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகவும் சென்று பார்வையிட்டிருந்தார்.
மேலும் இதன்போது குறித்த பிரச்சினை தொடர்பாக மக்களிடமிருந்து எழுத்துமூலமான கோரிக்கைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவுந் தெரிவித்திருந்தார்.


