கத்துக்குட்டி, நந்தன் மற்றும் பல படங்களை இயக்கிய இரா.சரவணன் எழுதிய சங்காரம் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர்கள் சசிகுமார், சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சூரி பேசியதாவது:-
சினிமாவிற்காக ஸ்கிரிப்டை படித்து விடுவேன். அது தொழிலுக்காக படிக்கிறது. புத்தகம் படிக்கிற பழக்கம் நமக்கு இல்லை. கடன் கொடுத்தவர் எதிரில் கூட தைரியமாக சென்று விடுவேன். புத்தகத்தை கொடுத்துவிட்டு தலைவா படித்து விட்டு சொல்லுங்க என்று சொல்வார்கள். எனக்கு பெரிய பதட்டமாகி விடும். அப்படிதான் சமுத்திரகனி ஒரு புத்தகத்தை கொடுத்தார்.
அப்புறம் இன்னொரு புத்தகம் கொடுத்தார். 2 புத்தகத்தையும் வாங்கி விட்டேன். அப்புறம் அவரை பார்க்கும் போதெல்லாம் புத்தகத்தை படித்தியா என்று கேட்பாரே என சுற்றிக்கொண்டு போய் விடுவேன். அப்படியே திடீரென என சந்தித்து விட்டால். அய்யோ அண்ணே சூப்பர் அண்ணன் என்று கூறி விடுவேன். புத்தகம் என்பது சாதாரண விஷயம் இல்லை. நானும் இப்போது புத்தகம் படிப்பது மட்டுமின்றி அப்பாவின் வாழ்க்கை வரலாறை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றார்.


