'மெய்யழகன்' படத்திற்கு பிறகு. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'வா வாத்தியார்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் எப்போதோ வெளியாகி கவனம் ஈர்த்தன. ஆனால் ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது. காரணம் படத்தை ஸ்டுடியோ க்ரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் இருந்து ரூ.21 கோடியை கடனாகப் பெற்றதாக கூறப்படுகிறது. இப்பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடக்கூடாது என, அர்ஜுன்லால் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டுடியோ கிரீன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தது.
இந்நிலையில் ரூ. 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்த பட நிறுவனம் தயாராக இருப்பதால், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஞானவேல் ராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்து விட்டதாக தெரிவித்து படத்திற்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, 'வா வாத்தியார்' படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவிட்டனர்.


