TamilsGuide

கனடாவின் சில பகுதிகளில் வீட்டிலிருந்து வேலை செய்த பணியாளர்களுக்கு அதிர்ச்சி

கனடாவில் வீட்டிலிருந்து வேலை செய்த அதாவது வர்க் ப்ரொம் ஹோம் முறைமை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்டு தொடக்கத்துடன், கனடா முழுவதும் பல ஊழியர்களுக்கான அலுவலகப் பணிவிதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.

குறிப்பாக, ஒன்டாரியோ மற்றும் அல்பெர்டா மாகாண அரசுத் துறைகளில் பணியாற்றும் பத்தாயிரக்கணக்கான ஊழியர்கள் முழுநேரமாக அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தில் ஜனவரி 5 முதல், மாகாண அரசு ஊழியர்கள் வாரம் ஐந்து நாட்களும் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்பெர்டா மாகாணத்தில் பிப்ரவரி மாதத்திலிருந்து, “ஒத்துழைப்பு, பொறுப்புணர்வு மற்றும் சேவை வழங்கலை வலுப்படுத்த” முழுநேர அலுவலகப் பணிக்கு அரசு சேவை திரும்புகிறது.

மெனிடோபா, பிரிட்டிஷ் கொலம்பியா, நியூ பிரன்ஸ்விக் போன்ற மாகாணங்களில் கலப்பு (Hybrid) பணிமுறை தொடர்கிறது.

நியூஃபவுண்ட்லாந்து & லாப்ரடார், வடமேற்கு பிரதேசங்கள் (Northwest Territories) ஆகியவை தங்களின் தொலைவேலை கொள்கைகளை மீளாய்வு செய்து வருகின்றன; இருப்பினும், வாரம் ஐந்து நாட்கள் அலுவலகப் பணி கட்டாயப்படுத்தப்படும் திட்டம் தற்போது இல்லை.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அலுவலகப் பணிநாட்கள் எப்போது, எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

பிரதமர் மார்க் கார்னி, இந்தத் திட்டம் “அடுத்த சில வாரங்களில் தெளிவாகும்” என்றும், பொதுத்துறை தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். 
 

Leave a comment

Comment