TamilsGuide

தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்

ஜனவரி மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற மைதானத்திற்குள் அதிகவான தண்ணீர் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது.

ஆனால் டித்வா சூறாவளி காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் தற்போது மைதானத்திற்குள் அதிகளவான தண்ணீர் தேங்கியுள்ளது.

டித்வா சூறாவளி தாக்கத்திற்கு முன்னர் சில பரீட்சாத்த போட்டிகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்தப் போட்டி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேலும் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பின்னர் குறித்த பரீட்சார்த்தப் போட்டி நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை மேலும் அறிவித்துள்ளது.

திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் மைதானத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானமானது 48 ஏக்கர் பரப்பளவில், 10 மத்திய ஆடுகளங்களுடன் அமைக்கப்படவுள்ளதுடன், மைதானத்தின் எல்லை தூரம் 80 மீட்டர்கள் வரை விரிவடையும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 138 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மைதானம் நிர்மாணிக்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதில் இந்த முயற்சி ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதுடன், இது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேசிய பாதை வேலைத்திட்டத்திற்கும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment