வடமேற்கு இத்தாலியில் உள்ள ஒரு மலையில் கேபிள் கார் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாயன்று (30) குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர் என்றும், சுமார் 100 பேரை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பியட்மாண்ட் பிராந்தியத்தில் உள்ள மாகுனகா கிராமத்திற்கு அருகில் உள்ள கேபிள் கார் அமைப்பின் மேல் மற்றும் கீழ் நிலையங்களில் இரண்டு பெட்டிகள் மோதியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக இத்தாலிய தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேல் பெட்டியில் இருந்த மூன்று பயணிகளும், தரை மட்டத்தில் இருந்த கேபிள் கார் இயக்குநரும் காயமடைந்த நிலையில் ஆறு பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாக மற்ற இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அருகிலுள்ள பனிச்சறுக்கு சரிவுகள் மூடப்பட்டன. விபத்தைத் தொடர்ந்து கேபிள் கார் சேவை நிறுத்தப்பட்டதால், குழந்தைகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 100 பேர், மான்டே மோரோ மலையில் சுமார் 2,800 மீட்டர் உயரத்தில் உள்ள மேல் நிலையத்தில் சிறிது நேரம் சிக்கித் தவித்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்தன.
அதேவேளை இத்தாலியில் சமீபகாலமாக கடுமையான கேபிள் கார் விபத்துகள் நிகழ்ந்துள்ளன . கடந்த ஏப்ரல் மாதம், நேபிள்ஸுக்கு தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்டெல்லம்மரே டி ஸ்டேபியா அருகே நான்கு பேர் உயிரிழந்தனர்.
அதேவேளை கடந்த 2021-ல், வடக்கு மாகியோர் ஏரியையும் அருகிலுள்ள மலையையும் இணைக்கும் கேபிள் கார் கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.


