சிறையிலிருந்தபோது, 'பெரியார் மனம் வைத்தால் சீக்கிரமாக விடுதலையாகி விடலாம்' என்று நீங்கள் நினைத்ததுண்டா?''
''இல்லை; நான் யாருடைய தயவிலும், சிபாரிசிலும், கருணையிலும் எப்போதுமே வாழ்ந்தவனுமல்ல; வாழ நினைப்பவனுமல்ல?''
''முதல்வர் கருணாநிதியைப் பற்றி...''
''ஒரு காலத்தில் அவர் என் கம்பெனி ஆக்டர்; இன்று இந்த மாநிலத்தின் முதலமைச்சர். என் கம்பெனி ஆக்டர் முதலமைச்சராயிருக்கிறார் என்றார் அதிலே எனக்குப் பெருமைதானே?''
''சரி, கலை உலகத்துக்கு வருவதற்கு முன்னால் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?''
''வீட்டுக்கு அடங்காத பிள்ளையாயிருந்தேன். ஸ்கூலுக்குப் போவதில்லை. ராபர்ட் கிளைவ் மாதிரி துடுக்குத்தனமாக ஏதாவது பேசிக்கிட்டிருக்கிறதே என் பொழுதுபோக்காயிருந்தது.''
''அதை விட்டுக் கலை உலகத்துக்கு நீங்கள் வந்தது எப்படி?''
''கலை உலகத்துக்கு நானாகவும் போகவில்லை; அதுவாகவும் என்னைத் தேடி வரவில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே என்னையும் கலையையும் ஒன்று சேர்த்தது.''
''அது என்ன சூழ்நிலை, சந்தர்ப்பம்?''
''வீட்டிலே சோறில்லை; டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அப்போ அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் இன்னிக்குப் பலரைக் கலைஞர்களாக்கியிருக்கிறது. 'பேக்ட்'டை யாரும் சொல்ல மாட்டேங்கிறானுங்க. வசதி வந்ததும் 'ஹிஸ்டரி'யையே மாத்திச் சொல்றானுங்க. 'ராயல் பேமிலி'ங்கிறானுங்க. கலைக்காகவே அவதாரம் எடுத்ததா வேறே அளக்கிறானுங்க. என்ன செய்யறது? உண்மை உறங்குது; பொய் பொன்னாடை போர்த்திக்கிட்டு ஊர்வலம் வருது. என்னைப் பொறுத்தவரை டிராமா கம்பெனி சோறுதான் என்னை 'ஆக்ட'ராக்கியிருக்கிறது. இதுதான் 'பேக்ட்'.
''ஒரு கலைஞன் முன்னேற வேண்டுமானால் மற்ற கலைஞர்களை முன்னேற விடாமல் தடுத்தால்தான் முன்னேற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?''
''இல்லை; சரக்கு உள்ளவன் அப்படி நினைக்க மாட்டான்; அந்த வேலையைச் செய்யவும் மாட்டான்.''
- விந்தன் எழுதிய ' எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் ' நூலிலிருந்து .


