இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ளமை அந்த கிராமம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்லியாரா டெய் மார்சி கிராமத்தில் வசிக்கும் மரியா மற்றும் ஆன்டோனியோ ஆகியோருக்கு பிறந்த இந்த பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 1990 களின் நடுப்பகுதிக்குப்பிறகு (சுமார் 30 ஆண்டுகளாக) இந்தக் கிராமத்தில் எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை.
இந்நிலையில் லாராவின் பிறப்பு அந்தக் கிராமத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பாக்லியாரா டெய் மார்சி ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு நிரந்தரமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அதாவது, தகவல்களின்படி 20 இற்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். இத்தாலியின் பல மலைக் கிராமங்களைப் போலவே, இங்கும் இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்குச் சென்றுவிட்டதால், முதியவர்கள் மட்டுமே வசித்து வந்தனர்.
இந்நிலையில், லாராவின் பிறப்புச் செய்தி பரவியதும், அக்கம் பக்கத்து கிராமத்தினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் அந்தக் குழந்தையைப் பார்க்கவும், அக்குடும்பத்திற்கு வாழ்த்துச் சொல்லவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்தாலிய ஊடகங்கள் இக்குழந்தையை 'Miracle baby' என்று கொண்டாடுகின்றன. ஏனெனில், மக்கள் தொகை குறைந்து வரும் இத்தாலிய கிராமங்களுக்கு இது ஒரு புதிய உயிர்ச்சக்தியைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.


