TamilsGuide

இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு

டித்வா சூறாவளியால் சேதமடைந்த நெல், பிற பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான அறிக்கையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.

66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள 16,869 விவசாயிகளுக்கும் மானியங்களும் இழப்பீடுகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்யைில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெல் பயிர் செய்கைக்காக 66,965 விவசாயிகளுக்குச் சொந்தமான 33,215 ஹெக்டேர் நிலத்திற்கு 4,982 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெல் பயிர்செய்கை இழப்பீட்டுக்கு சுமார் 50,000 ஹெக்டேர் நிலத்திற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கீகரிக்கப்படக்கூடிய அனைத்து விண்ணப்பங்களுக்கும் டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன் பணம் செலுத்தப்படும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

இதற்கிடையில், மேலதிகமாக உணவுப் பயிர்கள், மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடாக 16,869 விவசாயிகளுக்கு 670 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 3,708 ஹெக்டேர் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
 

Leave a comment

Comment