TamilsGuide

எஸ்.பி.பியை திட்டிய எம்.எஸ்.வி - காரணம் இந்த பாட்டு தான்

வாய்ப்பு கேட்டு வந்த நீ இப்படி பண்ணலாமா? எஸ்.பி.பியை திட்டிய எம்.எஸ்.வி : காரணம் இந்த பாட்டு தான்!

எம்.எஸ்.வியுடன் ஒரு பாடல் பதிவு நடைபெற்றபோது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை பற்றி கூறியுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியன்

தமிழ் சினிமாவில் 4 தலைமுறை நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இசையமைப்பாளர் எம்.எஸ்.வியுடன் இணைந்து பாடிய ஒரு பாடலை சரியாக பாடாததால் தன்னை திட்டியதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த பாடல் எஸ்.பி.பி.க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ஹிட் பாடல்களை பாடியிருந்தார். இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் எம்.எஸ்.வி இசையில், உருவான முத்தான முத்தல்லவோ என்ற படத்தில் ஒரு பாடலை எம்.எஸ்.வியுடன் இணைந்து பாடும்போது சரியாக பாடாத்தால் எம்.எஸ்.வி செல்லமாக திட்டியுள்ளார். 1976-ம் ஆண்டு விட்டல் இயக்கத்தில் வெளியான படம் முத்தான முத்தல்லவோ. முத்துராமன், சுஜாதா இணைந்து நடித்த இந்த படத்திற்கு திரைக்கதை வசனத்தை வாலி எழுதியிருந்தார். எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் ஜெய்கணேஷ் பாடகர் ஆக வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளரான தேங்காய் சீனிவாசனிடம் வாய்ப்பு கேட்டு வரும்போது இருவரும் இணைந்து பாடும் ஒரு பாடல் தான் ‘’எனக்கொரு காதலி இருக்கின்றாள்’’ என்ற பாடல். இதில் தேங்காய் சீனிவாசனுக்கு எம்.எஸ்.வியும், ஜெய்கணேஷ்க்கு எஸ்.பி.பியும் குரல் கொடுத்திருப்பார்கள். இந்த பாடல் பதிவின்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை எஸ்.பி.பி பகிர்ந்துள்ளார்.

இந்த பாடலை எப்படி பாட வேண்டும் என்று எம்.எஸ்.வி சொல்லிக்கொடுத்தபோது, எஸ்.பி.பி அதை குரலை உயர்த்தி பாடியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி, படத்தின் கதைப்படி, நான் இசையமைப்பாளர் என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த நீ, அடக்கிதான் வாசிக்க வேண்டும். என்னை ஓவர்டேக் செய்தால் பல்லை உடைத்துவிடுவேன். நான் என்ன பாடுகிறேனோ அதை பாடு என்று கூறி செல்லமாக திட்டியுள்ளார்.

இவர்களின் குரலில் வந்த இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தான் நடித்த காதல் மன்னன் திரைப்படத்திலும் எம்.எஸ்.வி இந்த பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேன்மொழி

Leave a comment

Comment